- முதல் அமைச்சர்
- எம். யு.
- சேலம்
- திமுகா
- கே. ஸ்டாலின்
- ஜனாதிபதி
- ஈ.
- செல்வகானடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சேலம் ஷாப்பிங் தெரு
- சட்டமன்ற உறுப்பினர்
சேலம்: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை சேலம் கடைவீதிகளில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் நேற்று இரவு தர்மபுரியில் பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இரவு சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். இன்று இரவு சேலம் ஆத்தூர் அருகேயுள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் நடக்கும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
இந்நிலையில், சேலத்தில் தங்கியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 7 மணிக்கு பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பகுதிகளில் நடந்து சென்று திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். கோட்டை மாரியம்மன் கோயில் முன்பகுதிக்கு பிரசார வாகனத்தில் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்றார். முதல் அக்ரஹாரம், கடைவீதி ஆகிய பகுதிகளில் காலை நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறி வாங்க வந்திருந்தனர். அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
முதல்வரை பார்த்ததும் பொதுமக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அவர்கள் முதல்வருக்கு கை கொடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அக்ரஹாரம் பகுதியில் சாலையின் இருபகுதியிலும் இருந்த மக்களிடம் முதல்வர், புன்முறுவலுடன் வாக்கு சேகரித்தார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் அன்போடு வரவேற்றனர். ராஜகணபதி கோயில் அருகில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பூ வியாபாரம் செய்யும் மூதாட்டி ஒருவர், முதல்வருக்கு மாலை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பெண்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உதவித்தொகை வருகிறதா? என கேட்டார். பெண்களும் சரியான நேரத்தில் 1000 ரூபாய் வருகிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். இந்த பணம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது’ என கூறி முதல்வருக்கு நன்றி தெரிவித்னர். சிலர் அவரிடம் குறைகளையும் தெரிவித்தனர். அந்த குறையை உடனடியாக சரி செய்யுமாறு மாவட்ட திமுக செயலாளரான ராஜேந்திரன் எம்எல்ஏவிடம் முதல்வர் கூறினார்.
பின்னர் கடைவீதி வழியாக வாக்கு சேகரித்து வந்த முதல்வர், கன்னிகாபரமேஸ்வரி கோயில் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனீர் அருந்தினார். அவருடன் வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, பார்த்திபன் எம்பி ஆகியோரும் அமர்ந்து தேனீர் குடித்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வாக்குசேகரித்த முதல்வர் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பினார்.
மக்களை மட்டுமே சந்திக்க புதிய திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும்போது, காலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அவர் செல்லும் இடம் ரகசியமாக வைக்கப்படும். தகவல் தெரிந்து விட்டால், கட்சிக்காரர்கள் வந்து விடுவார்கள். இதனால் பொதுமக்களை சந்திக்க முடியாமல் போய்விடும் என்பதால் ரகசியம் காக்கப்படும். அதன்படி இன்று சூரமங்கலம் உழவர் சந்தைக்கு முதல்வர் வருவார் என தகவல் பரவிய நிலையில், டவுன் பகுதிக்கு முதல்வர் வந்தார். முழுக்க முழுக்க பொதுமக்களை சந்தித்து அவர் வாக்குசேகரித்தார்.
செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்து கொள்ள பொதுமக்கள் மிகுந்த ஆசையுடன் இருப்பார்கள். அதன்படியே இன்று அவரது நடைபயணத்தின்போது, பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொள்ள மிகுந்த ஆர்வமுடன் வந்தனர். பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். செல்பி எடுக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என யாரும் வருத்தப்படாத வகையில் அனைவருடனும் முதல்வர் செல்பி எடுத்தார்.
The post சேலம் கடைவீதியில் நடந்து சென்று திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.